Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Saturday, July 17, 2021

வரமும் சாபமும்

காலை நடையில் கடவுளைச் சந்தித்தேன்

மென்னோட்ட வியர்வையுடன் மெல்லச் சிரித்தவர்

தோளில் கையிட்டுத் தோழமை காட்டினார்

தேநீரின் கதகதப்பில் கதைக்கத் தொடங்கினோம்


எல்லாமறிந்தவரிடம் என்குறைகள் சொல்ல மனமில்லை

விந்தையான வினாக்களில் ஒன்றை வீசினேன்

அளித்த வரத்திலும் சாபத்திலும் நினைவிலிருப்பது எது?

நடுக்கடலின் அமைதியுடன் நுண்மையாக நகைத்தார்


கரிய பெரிய ஈருருளியில் வந்தவரொருவர்

அறிமுகம் இல்லாதிருந்தும் வினவப்படாமலும்

தன்னறிவைப் பற்றித் தற்பெருமை பேசினார்

தன் செல்வச்செழிப்பையும் செல்வாக்கையும் சிலாகித்தார்


குவளையெடுக்க வந்த கடைக்காரரோ அலுத்துக்கொண்டார்

படிப்பு இல்லாததையும் ஏமாளியாய் இருப்பதையும்

புலம்பிப் போக - மலங்க மலங்க விழித்தேன்.

கடவுள் குறும்பாய்ச்சிரிக்க - என்னைமீறிப் பேசியதென் வாய்.


"ஈருருளிக்காரின் அறிவு, வளம் - வரம்.

கடைக்காரரின் அறியாமை, அலுப்பு, சாபம்"

குழவியுளறல் சுவைக்கும் தாயாய் முகங்கனிந்து 

எதிர்வந்தென் இமைகளை மூடினார் தன் விரல் கொண்டு.


உண்ணாமல் உறங்காமல் நாளும் கைபேசி வெறித்துச்

சிறிதையும் பெரிதையும் எண்ணியுழன்றார் பெருமைவான்.

சுற்றத்துடன் இன்கதைபேசி, கடைமூடி, குடும்பத்துடன் உண்டு, 

மகளையும் நாய்க்குட்டியையும் மடியில் வைத்தே உறங்கிப்போனார் கடைக்காரர்.


குழம்பிய குட்டையாய் நான் - பேசினார் பரம்பொருள்.

மனிதர் வைக்கும் அளவைகள் அவர்தமக்கே விளங்குவதில்லை.

வரமென்றும் சாபமென்றும் நானேதும் தருவதில்லை.

வாழ்க்கையென்னும் விளையாட்டைக் காண்பதன்றி நானேதும் செய்வதில்லை. 


வரமும் சாபமும் மெய்யும் பொய்யும்

நீதியும் அநீதியும் நல்லதும் அல்லதும்

உம் மனச்சாளரக் கண்ணாடி வண்ணங்களன்றி வேறில்லை.

ஆழமான சிரிப்புடன் விடைகொடுத்தார் கடவுள்.


--

"காட்டு மஞ்சரி இணைய இதழின் ஜூலை'21 பதிப்பில் வெளியான வரிகள்.

http://www.mannankadu.org/kaattumanjari

Thursday, August 30, 2018

மெய்த்திருப்பது எதுவோ

நில்லாது நிலையாது
ஓடும் வாழ்வினிலே
காலம் கடந்திடினும்
மாறிலியாய் இருப்பதென்னவோ...

அன்பு, புகழ், செல்வம் என
எல்லாமே மாறுகையில் - எதும்
மாறாதிருக்க வேட்கை கொள்ளல்
நீர்க்குமிழியில் நிரந்தரம் நாடுதலே.

எல்லாம் நீர்க்குமிழியெனில்
எதுவும் மாறுமெனில்
மெய்த்திருப்பதெதுவோ?
மெய்யென்றொன்றுண்டோ?

நீரில் எழுந்து உடையும் வரை
குமிழி மெய் தானே...

இல்லாதிருந்தபின் எழுந்து
பின் உடைந்து இல்லாததாகும்
குமிழி - அது வாழும் வரை
மெய்யன்றோ

உணர்ச்சி உறவு உடமைதனில்
மாறிலிகள் தேடாமல்
கிட்டும் நேரமே அது மெய்யென்று
தாமரையில் தண்ணீராய் இன்புற்று வாழ்ந்திடுவோம்...

Monday, May 20, 2013

கடலும் கடவுளும்

தாய் தந்தை கைபிடித் தெகிறி,
அலைகளென் கால்கள் தொடவிடாமல் சிரித்தேன்
மூன்று வயதில்.

மணல் கோபுரம் கட்டி
ஓடிவந்ததை உதைத்திடித்தேன்
ஐந்து வயதில்.

ஓடிப்பிடித்தாடி நண்டுபிடித்து
செல்லுமிடமெல்லாம் மணலிறைத்தேன்
பத்து வயதில்.

நீரில் புரண்டு பிசுபிசுத்து
காற்றிலும் கரிப்பே ற்றினேன்
பதினைந்து வயதில்.

காதல் குடை பிடிக்க காதலன் கைபிடித்து
ஈர மனதுடன் பாதம் நனைத்தேன்
இருபது வயதில்.

இப்போது
பிள்ளை மணல் கோபுரம் கட்ட,
கடல் குடிக்கின்றன என் கண்கள்.

மாறும் மனிதரின் மாற்றங்கள் கண்டும்
மாறாமல் மௌனிக்கிறது கடல்,
கடவுளைப் போல.

Tuesday, August 30, 2011

வாழ்க்கை, காதல், வெங்காயம்...

தேடலில் மிஞ்சுவது
கண்ணீரும் வெறுமையுமே...
மகிழ்ச்சிக்கு ஒரே வழி
முழுமையை ரசிப்பதே...




Pages