Showing posts with label குழந்தைக் கதை. Show all posts
Showing posts with label குழந்தைக் கதை. Show all posts

Sunday, November 1, 2020

மகிழனின் அச்சம்

மகிழனுக்கு அஞ்சு வயசு ஆகுது. அவன் கரப்பான்பூச்சி, பூச்சாண்டி, பல்லி, வண்டு என எதுக்கும் அச்சப்பட மாட்டான். அப்படிப்பட்ட மகிழனே அச்சப்படற ஒன்னு இருக்கு - அது தான் “தாடி”.

பக்கத்து வீட்டு குழலிய அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் அவ கூட விளையாட, அவ வீட்டுக்குப் போக மாட்டான். ஏன்னா, குழலியோட அப்பா தாடி வளர்த்திருந்தார்.
மகிழன், அவன் பெற்றோரோட, அவனுக்கு விருப்பமான நடிகர் நடிச்ச திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தான். ஒரு நினைவுமீட்சிக் காட்சில அந்த நடிகர் தாடி வெச்சிருந்ததப் பாத்த மகிழன் அச்சமாகி, அப்பா மேல முகத்த வெச்சு அழத் தொடங்கீட்டான். பாதி படத்தைப் பார்க்காம வீடு திரும்பினாங்க.
“அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா - யாருக்குமே தாடி இல்ல. ஆனா குழலியோட அப்பா மாதிரி சில பேரு மட்டும் ஏன் தாடி வெச்சிருக்காங்க. முடிகளுக்கு நடுவுல இருக்க அவங்க கண், மூக்கு, வாயெல்லாம் பார்க்கவே பயமா இருக்கு” ன்னு நினைப்பான் மகிழன்.
மகிழனுக்குத் தங்கச்சி பாப்பா பிறந்தா. மகிழன் மாதிரியே இருந்ததால, அவளுக்குப் பேர் கூட "மகிழினி"ன்னு தான் வெச்சாங்க. மகிழனுக்கு அவ மேல கொள்ளை அன்பு. அவளுக்கு ஒரு வயசானப்ப, மொட்டை அடிக்கக் குடும்பத்தோட ஒரு கோயிலுக்குப் போனாங்க.
மொட்டை அடிக்கற வரிசைல அப்பா, மகிழினியத் தூக்கிட்டு முன்னயும், அம்மாவும் மகிழனும் பின்னயும் நின்னாங்க. தற்செயலா மகிழன் எட்டிப் பார்த்தப்ப, மகிழினிக்கு முன்ன தாடி வெச்ச ஒருத்தர் இருந்தார். மகிழினி வேற அவர் தோளத் தட்டித் தட்டி விளையாடினா. மகிழனுக்கு அச்சமாவும் கவலையாவும் இருந்தது. தன் தங்கைக்காக அவன் அழத் தொடங்கும் முன்ன, ஒன்னு நடந்தது. அவன் அழக் கூட மறந்துட்டான்.
மகிழினி தாடிக்காரர் தோள்ல தட்ட, அவர் திரும்பிச் சிரிச்சார். அவரோட தாடிய மகிழினி கையால பிடிச்சு இழுத்துச் சிரிக்க, அவரும் அடக்க முடியாம சிரிக்கிறார். மகிழன் திறந்த வாய் மூடாம, மகிழினியும் தாடிக்காரரும் கொஞ்சிக்கறதப் பார்த்தான்..
“தாடி வெச்சவங்க ஒன்னும் கெட்டவங்க இல்ல போல…
நாம தான் தேவையில்லாம அச்சப்படுறோமோ…”
அவனுக்கு மகிழினிய நினைச்சா பெருமையா இருந்துது.
நமக்கு ஏற்படும் உணர்வுகள் எல்லாம், நாம உலகத்தப் பார்க்கற பார்வையின் வெளிப்பாடுகள் தான். நம் பார்வையை நல்லதா மாத்தினா, நம் உணர்வுகளும், உலகமும் நல்லவையாகும்.

Tuesday, October 27, 2020

பாவையின் நண்பன்

பாவை உற்சாகமா காலைல எழுந்தா. 

அவங்க பள்ளில இன்னிக்குப் பாட்டுப் போட்டி. அதுல, “சின்ன சின்ன ஆசை” பாட்ட பாடப் போறா. இரண்டு நாளா பயிற்சி எடுத்தா. 


பாடல முணுமுணுத்துட்டே பல் தேய்ச்சா, குளிச்சா.

“ம் ம் ம்ம் ம்ம்… ம் ம் ம்ம் ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்… ம்ம்ம்ம் ம்ம் ம்ம்.. “


அவளுக்குப் பிடிச்ச வெள்ளை வண்ண உடைய போட்டுகிட்டா.

“வெள்ளை நிறம் தான் மேடைல பளிச் ன்னு தெரியும்.. புகைப்படத்திலயும் அழகா இருக்கும்.”


காலை உணவுக்கு, அப்பா அவளுக்குப் பிடிச்ச, குட்டி தோசை, சாம்பார் செஞ்சிருந்தாங்க. அத மகிழ்ச்சியா சாப்பிட்டா பாவை, பாடல முணுமுணுத்துட்டே!

“ம் ம் ம்ம் ம்ம்… ம் ம் ம்ம் ம்ம்.. ம்ம்ம்ம் ம்ம்… ம்ம்ம்ம் ம்ம் ம்ம்.. “


பாவை பள்ளிக்கு போனா. அங்க அவ தோழன் கிள்ளி, 

“நல்லா பாடு பாவை. நாங்க உனக்கு கையொலி எழுப்புவோம்” ன்னு சொன்னான். பாவை இன்னும் உற்சாகம் ஆனா. 


போட்டி தொடங்கிச்சு. மேடைல பாவை பாடினா, 

“சின்ன சின்ன தோசை..

சிறகடிக்கும் தோசை..

முத்து முத்து தோசை..

முடிந்து வைத்த தோசை..”

காலைல சாப்பிட்ட ருசியான தோசை நினைவாவே இருந்திருக்கா. 

பார்வையாளர்கள் எல்லாரும் சிரிச்சிட்டாங்க. பாவைக்கு ஒரே குழப்பம். மேடைய விட்டு இறங்கின பிறகு தான் அவளுக்கு ஏன் சிரிச்சாங்கன்னு புரிஞ்சுது. 

அவள் நண்பர்கள், “தோசை… தோசை”ன்னு பாடி அவள கேலி செஞ்சாங்க.  அவளுக்கு கோபமாவும், அழுகையாவும், துன்பமாவும் இருந்துது. 

ஓ…”ன்னு அழத் தொடங்கினா.

 

திடுக்குனு தூக்கத்தில இருந்து எழுந்தா, பாவை. இப்படி ஒரு கனவு அவளுக்கு வந்ததே இல்ல. அம்மாவ எழுப்பி தண்ணி கேட்டு குடிச்சா. 

பின்ன ரொம்ப நேரமா அவளுக்கு தூக்கமே வரல.


வளவன், ஓட்டப் பந்தயத்துல கடைசியா வந்ததுனால, பாவையும் அவ நண்பர்களும் அவன கேலி செஞ்சது, அவ நினைவுக்கு வந்தது. கனவுல கேலி செய்யப்பட்டப்ப தனக்கு இருந்த மாதிரி தான் அவனுக்கும் துன்பமா இருந்திருக்கும்ன்னு பாவைக்கு தோணிச்சு. வளவன நினைக்க பாவமாவும் தன்னை நினைச்சு கோபமாகவும் வந்துது. அப்படியே தூங்கிப் போயிட்டா.


அடுத்த நாள் காலை, பள்ளிப் பேருந்துல, வளவன் பக்கத்தில போய் உட்கார்ந்தா பாவை. அவளுக்கு இன்னொரு நண்பன் கிடைக்கப் போறான்!


Pages