மழை மாலையொன்றில்
மாடிமுகப்பில் தஞ்சமடைந்தனர்
சிட்டுக்குருவியர் இருவர்
தானியமும் தண்ணீரும்
தினம் வைக்கலானேன்
அவரை எதிர்பார்த்து
சின்னஞ்சிறு கீச்சல்கள்
சிறகடிக்கத் தொடங்கின
மாடியிலும் மனதிலும்
நாளில் பலமுறை வருவர்
கம்பு, அரிசி விரும்புவர்
தினையைத் தீண்டார்
சாளரக் கம்பிகளில்
சண்டையிடுவர்
சில நாள்
ஒருவருக்கொருவர்
ஊட்டி மகிழ்வர்
சில நாள்
சிலிர்த்து மழைநீருதிர்த்து
சின்னஞ்சிறு தலையாட்டி
குதித்து நகர்வர்- நம் மனதிற்குள்ளும்
காலைப் பரபரப்பிலும்
கவனமாய் உணவிடுகிறேன்
ஏனோ? சிந்திக்கலானேன்
சிட்டுக்குருவியர் சிறுகுழந்தையாய்த்
தெரிவதாலோ? சிறுமிப்பருவ
நினைவுகளை அவர் தருவதாலோ ?
என் மகள்களுக்கு
ஈகை கற்பிக்கவோ? அனைத்துயிரும்
ஒன்றே என்றுரைக்கவோ?
புண்ணியக் கணக்கைக்
கூட்டவோ? நல்வினையால்
நன்மை ஈட்டவோ ?
இயற்கைக்கு வைக்கும்
வணக்கமோ? அவ்வுயிருள்
கடவுள் காணும் முயற்சியோ?
இவையேதுமன்றி வேறு
காரணமோ? இல்லை
இவையனைத்துமே தானோ?
ஏதாகினும் -
இல்லம் வந்து அவர்
கீச்சிக் கொத்தி உண்கையில்
மனத்தோட்டத்தில் மலர்கின்றன
மகிழ்ச்சி மலர்கள் பல -
சின்னச் சின்னதாய்
Image: https://share.google/oAYnzU2ZNRrOiaXDN

No comments:
Post a Comment